ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் 180 டன் எடையில் ஒரே கல்லால் ஆன 40 அடி உயரம் கொண்ட விஸ்வரூப பாலமுருகனுக்கு சுமார் 2000 லிட்டர் பாலில் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் பாலாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ளது அருள்மிகு விஸ்வரூப பாலமுருகன் ஆலயம். இங்கு ஒரே கல்லால் ஆன 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்வரூப பாலமுருகன் மூலவராக உள்ளார். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற பால் அபிஷேக விழாவில், பெண்கள் 108 பேர் பால்குடம் சுமந்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.
இதற்கு பின் விஸ்வரூப பாலமுருகன் சுவாமியின் 40 அடி சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் விழா குழுவினர் 1008 லிட்டரில் பால் அபிஷேகம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பக்தர்களுக்கும் தங்கள் பங்கிற்கு பால் கொண்டு வர சுமார் 2,000 லிட்டரில் பால் கொண்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. 40 அடி பிரமாண்ட சிலையில் பால் அபிஷேகம் செய்தது நீர்வீழ்ச்சியில் பால் கொட்டியது போல் காட்சியளித்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
சௌம்யா.மோ






