இந்தியா – ஆப்கனிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட்டு விடாமல் தடுக்க பாகிஸ்தான் முயல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை இணை செயலாளர் ஜெ.பி. சிங், சமீபத்தில் ஆப்கன் சென்று தாலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே நின்று போயிருந்த தகவல் தொடர்பு, மீண்டும் ஏற்படத் தொடங்கி உள்ளது. அதோடு, இந்தியாவின் அங்கீகாரத்தையும், இந்தியாவுடன் நல்லுறவையும் ஆப்கன் ஆட்சியாளர்களான தாலிபான்கள் விரும்புவது உறுதிப்பட்டுள்ளது. இதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டு விடாமல் தடுக்க பாகிஸ்தான் முயல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக பல்வேறு புனைவுகளை தயாரித்து அவற்றை பரப்பும்படி, பல்வேறு நாடுகளில் உள்ள தங்கள் தூதரகங்களை பாகிஸ்தான் அறிவுறித்தி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஆப்கனின் தாலிபான் ஆட்சியாளர்களுக்கு எதிரான நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற கட்டளை அவர்களுக்கு இடப்பட்டுள்ளதாக அமெரிக்க, ஐரோப்பிய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதன்மூலம், ஆப்கனை ஆட்சி செய்யும் தாலிபான்கள், இந்தியாவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் நோக்கம் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதில் இருந்து, அந்நாட்டு அரசுடான தொடர்பை துண்டித்துக்கொண்ட இந்தியா, தற்போது வெளியுறவு இணை செயலாளர் ஜெ.பி. சிங் தலைமையிலான குழுவினரை ஆப்கனுக்கு அனுப்பியது.
அவர்களும், தாலிபான் தலைவர்கள், முன்னாள் அதிபர் அமித் கர்சாய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு, காபூலில் மூடிக்கிடந்த இந்திய தூதரகமும் திறக்கப்பட்டு இந்திய தொழில்நுட்பக் குழுவினர் அங்கு பணியாற்றித் தொடங்கி உள்ளனர்.
அதோடு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு தொடர் உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
இவை மட்டுமின்றி, தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றும் முன் இந்தியாவில் கல்வி பயில வந்த 80 ஆப்கன் மாணவர்கள், கல்வி முடிந்த பிறகும் அவர்கள் ஆப்கன் செல்லாமல் இங்கேயே இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு 12 மாத பயிற்சியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஆங்கில பேச்சு பயிற்சியை அளிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தாலிபான் அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்திய – ஆப்கன் அரசுகளுக்கு இடையே தொடர்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தொடர்பு வலுப்பட்டு வருகிறது.
காபூலில் உள்ள இந்திய தூதரகம் திறக்கப்பட்டதை, தாலிபான் அரசு வரவேற்றுள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், தாலிபான்களை இந்தியாவுக்கு எதிராக நிறுத்தவும் பாகிஸ்தான் தனது வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் முயன்று வருவது அம்பலமாகி உள்ளது.