கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது! குடியரசு தலைவரிடம் விருதை பெற்று கொண்ட பிரேமலதா விஜய்காந்த்!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.  இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை…

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

அந்த வகையில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி, அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் அதில் இடம்பெறவில்லை. இதனையடுத்து முறைப்படி எந்த அழைப்பும், அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். பின்னர் அழைப்பு வந்ததாக கூறினர்.

இதையடுத்து 2வது கட்டமாக இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்று பத்ம விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றனர். விழாவில் விஜயகாந்துக்கான பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இருந்து பிரேமலதா விஜயகாந்த் பெற்று கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.