ஆக்சிஜன் பற்றாக் குறையால் சுவாசிக்கப் போராடிய கணவனின் உயிரைக் காக்க வாயோடு வாய் வைத்து சுவாசத்தைப் பரிமாற்றம் செய்த மனைவியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவமனையில் ரவி சிங்கேல் என்பவர் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து செயற்கை சுவாசத்தின் தேவை அதிகரித்தது. இந்த மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவரும் அவரது மனைவியும் பல மருத்துவமனைகளுக்குச் சென்று கொரோனா சிகிச்சை பெற முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டபோதும், அவருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தனது கணவரைக் காப்பாற்ற மனைவி ரேணு சிங்கெல் வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறினார்.
ஆனால் இவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. ரவி சிங்கேல் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆக்ரா மருத்துவ அதிகாரி பாண்டே கூறுகையில் ‘மாவட்டம் முழுவதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம்’ என்று அவர் கூறினார்.
இந்தியா கொரொனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்துவருகிறது. நாடு முழுவதும் தினமும் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினமும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி, உத்தரபிரதாம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







