ஆஸ்கர் விருதுகள் 2023: இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படம்

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . கன்னடத்தில் கடந்த ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கம்…

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

கன்னடத்தில் கடந்த ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் ‘காந்தாரா’ திரைப்படம்  செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாக மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, நல்ல வசூலையும் குவித்ததால், படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்தது.

அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்தது.

இதனை தொடர்ந்து காந்தாரா திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்பி வைக்க படக்குழு திட்டமிட்டது . அதன்படி விருது பரிந்துரைக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டதாக படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர் தெரிவித்திருந்தார். மேலும் கடைசி நேரத்தில் விண்ணப்பத்தை அனுப்பியிருந்தாலும், தங்களது படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் “கந்தாரா’  2 ஆஸ்கார் தகுதிகளைப் பெற்றுள்ளதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.