வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வு) புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்…
வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள் மற்றும் மற்றும் கட்சியின் தலைவர்களின் புகைப்படங்கள் அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நேரங்களில் பயன்படுத்தலாமே தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களில் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் விதிமுறை மீறிய நம்பர் பிளேட்களை நீக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது அதிகரித்து வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலைகளை பராமரிப்பது இல்லை என்றும் வெளிச்சம் குறைவான இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும், ஜீப்ரா கிராஸ் மற்றும் தேவையான இடங்களில் பேரிகார்டு அமைத்து சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், தற்போதைய சூழலில் வழக்கறிஞர்/ பிரஸ் /போலீஸ் போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் அதிகமாக ஒட்டி உள்ளனர் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் அதிக அளவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது இதுகுறித்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.








