சென்னை சாலைகளில் கேட்பாரற்று நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுப் பணிகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த சேவைத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கிய அறிவுறுத்தல்களாவது:
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை குழாய், குடிநீர் குழாய் பதித்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், மின்துறை பணிகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் போது ஏற்படுகின்ற சாலை வெட்டுக்களை அந்தப் பணிகள் முடிவுற்றவுடன் உடனடியாக சாலை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து, பொதுமக்களுக்கு இடையூறின்றி பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
அனுமதியின்றி சாலை வெட்டுக்களை தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது. மாநகராட்சியிடம் உரிய அனுமதியைப் பெற்றவுடன் தான் சாலை வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் சாலை வெட்டுக்களை மேற்கொள்ளும்போது அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களையும் சீர்செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த வாகனங்களை கைப்பற்ற வேண்டும். மேலும், கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்றி நடவடிக்கை மேற்கொள்வதோடு, எளிதான போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டும்
பருவமழைக்கு முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முடித்திட வேண்டும். விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளையும் உரிய துறைகளுடன் ஒருங்கிணைந்து முடித்திட வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்திப் பேசினார்.
இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் (கிழக்கு) சமே சிங் மீனா மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







