மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையேயான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் இணைந்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியினரும் தாங்கள் தொடர்ந்து பாஜக கூட்டணியிலேயே உள்ளதாகவும், கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக அல்ல, எடப்பாடி பழனிசாமிதான் என கூறி வருகின்றனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அணி அமைத்து அதிமுகவை மீட்க உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தாமரை சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஓபிஎஸ் தரப்பு தயங்குவதாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது மட்டுமின்றி, அமமுகவுடனும் பாஜக தரப்பில் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் அவர்களையும் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்துவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினருமே தாமரைச் சின்னத்தில் தேர்தலை சந்திக்க தயக்கம் காட்டி வருவதால் கூட்டணி இறுதி செய்வது இழுபறியில் உள்ளது.
டெல்லி தேர்தல் ஆணையத்தை சந்நித்த பின் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்யும் என கூறப்படுகிறது. மற்றொருபுறம் அதிமுகவுடன், பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை பேச முயற்சித்து வருவதால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக காலதாமதப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.