அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுள்ளனர்.
அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் ஆணையாளர்களாக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, 2 நாட்களும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையாளர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்பு மனுக்களை பெற்றனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் காலை 10.50 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு சென்றார். இருவரையும் கட்சி தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கொண்டனர். பின்னர், அ.தி.மு.க. மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து இருவரையும் வரவேற்றனர். தொடர்ந்து, கட்சி வளாகத்திற்குள் இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, காலை 11.20 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தங்களின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன என்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதுபற்றி அக்கட்சியின் தேர்தல் ஆணையர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் ஆணையாளர்களாக இருக்கும் அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் அறிவித்தனர். இதனை தொடர்ந்து, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.