திருமணத்திற்கு வற்புறுத்தல்- உயிரை மாய்த்து கொண்ட மாணவி

விழுப்புரம் அருகே திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால், மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த நல்லேந்தரன் என்பவரது…

விழுப்புரம் அருகே திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால், மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த நல்லேந்தரன் என்பவரது மகள் வினோதினி. இந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டுமென பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டு கல்லூரி படிப்பினை தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

மேலும் மகளை திருமணம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து மாணவி வினோதினி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோருடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் திருமணம் முடிக்க வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோதினி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடி பார்த்தும் மகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில், வீட்டின் அருகே இருந்த கிணற்று நீரை இறைத்து தேடி பார்த்துள்ளனர். அப்போது, வினோதினி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது. மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

 

இதையடுத்து, தகவலறிந்து வந்த அரகண்டநல்லூர் காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

எதற்கும் உயிரிழப்பு தீர்வாகாது என்பதை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் பல்வேறு முன்னெடுப்பு விழிப்புணர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் யாரும் உயிரிழப்பு எண்ணத்தை கையில் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்..

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.