புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க கூடாது! – எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்!

நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் விவகாரத்தில் எந்த அரசியலும் இல்லை என்றும், நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல்…

நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் விவகாரத்தில் எந்த அரசியலும் இல்லை என்றும், நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் குறித்து சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் மற்றும் மாநில அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்து ஆட்சி மாற்றத்தின்போது செங்கோல் முக்கிய பங்கு வகித்தது. அந்த செங்கோல் தயாரித்த இருவரும் உயிருடன் உள்ளனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி கவுரவிக்க உள்ளார்.  செங்கோல் வைக்கப்படும் நிகழ்வில் தமிழ்நாட்டில் உள்ள 20 ஆதீனங்கள் பங்கேற்க உள்ளனர். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்பட உள்ளது.

செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை. நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் கோயிலுக்கு கொடுக்கும் மரியாதையை புறக்கணிப்பது நல்லதற்கு அல்ல. குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதையை பிரதமர் வழங்கியுள்ளார்.

மேலும், சத்தீஸ்கரின் சட்டப்பேரவையை சோனியா காந்தி திறந்து வைத்தார். ஆளுநர் திறந்து வைக்கவில்லை. நாட்டிற்கு குடியரசுத் தலைவர் போல, மாநிலத்திற்கு ஆளுநர்தான் முக்கியம்.

இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.