நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டுயானைகள் சேதப்படுத்தியதில் 8 மாத குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழிப்பள்ளி கிராமத்தில் பனியர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் வனப்பகுதியின் அருகே
அமைந்துள்ளதால் இந்த பகுதியில் காட்டு யானைகள் ஊடுருவி அட்டகாசத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், பழங்குடியினரின் நான்கிற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து முற்றிலுமாக சேதப்படுத்தியது. இதில் அந்த குடியிருப்பில் தங்கியிருந்த சங்கரன் (வயது 35), வனிதா என்ற 8 மாத குழந்தை உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் வனத்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வந்த நிலையில், நேற்று இரவு குடியிருப்புகளை முற்றிலும் இடித்து சேதப்படுத்தியதில் குடியிருப்புகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது.
இப்பகுதியில் காட்டு யானைகள் நுழையாமல் இருக்க சோலார் வேலிகள் அமைத்து தர வேண்டும் எனவும், குடியிருப்புகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் புதிய குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








