முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் சுற்றுலாப் பணிகளிடம் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் காகித டம்ளர் மற்றும் தட்டு, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.
அதேபோல் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சனி, ஞாயிறு தொடர் விடுமுறையை ஒட்டி கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிந்திருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கிட்டத்தட்ட சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் சுற்றுலாப் பணிகளிடம் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்களின் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதிக்குள் வீசக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.







