இந்திய உணவுக் கழகம் வாயிலாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலமாகப் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் 3.7 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த விசாரணையின் போது ‘குடும்ப அட்டை இல்லாமல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வாறு உணவு விநியோகம் செய்யப்படுகிறது? ” என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டியா, “ புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காகக் கூடுதல் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் கடந்த மே 20, 25 தேதிகளில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள இந்திய உணவு கழகங்களில் போதிய உணவுகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தொண்டு நிறுவனங்கள் மூலமாகப் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவுகள் வழங்கல் 421 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. ‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்’ மூலம் வரும் நவம்பர் மாதம் வரை புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள்.
மேலும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு மாதம் ஐந்து கிலோ உணவுப் பொருட்களை இலவமாக ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.







