அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு கால பணி நீட்டிப்பு மற்றும், மாத ஊதியம், இதர படிகளை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3000 ஆசிரியர்கள் வேலை இழக்கும் நிலை இருந்தது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாய சட்டம் அறிவுறுத்துகிறது. அதன்படி, 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், 5 ஆண்டுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி நியமனம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது 2021-22ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்காலிக பணியிடங்களில் பணிபுரியும் 3000 ஆசிரியர்களுக்கு ஓராண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கியும், மேலும் மாத ஊதியம் மற்றும் இதரப்படிகள் ஆகியவற்றை வழங்கவும் ஆணையிடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.








