ஆடு திருடர்களை பிடிக்கச் சென்றபோது கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன், நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். நவல்பட்டு ரோட்டில் மூன்று பைக்குகளில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்திய போது அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, ஆடு திருடும் கும்பல் என்பதை அறிந்து அவர்களை பிடிக்க துரத்தி சென்றுள்ளார். திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையிலுள்ள முகாம்பிகை கல்லூரிக்கு அருகே பள்ளத்துப்பட்டி பகுதியில் பைக்கில் வந்தவரை பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளார். அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி டி.ஐ.ஜி சரவண சுந்தர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ,அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.