பிப்ரவரி 25ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைய உள்ளதால் சட்டமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது, அதற்கான ஆயத்த பணிகள் குறித்து இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னையில் 2 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் வரும் 23ஆம் தேதி, 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்துக்குப் பின்னர் தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு எப்போது தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் 25-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.







