திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து; 8 பேர் காயம்

மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதில் சென்ற 8 பயணிகள் லேசான காயமடைந்தனர். கோயம்புத்தூரில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக…

மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதில் சென்ற 8 பயணிகள் லேசான காயமடைந்தனர்.

கோயம்புத்தூரில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் பேருந்து மேட்டூர் அடுத்த சாம்பள்ளி அருகே வந்தபோது பேருந்தில் முன் பகுதி கரும்புகை வெளியாகியுள்ளது.

இதனை கண்ட ஓட்டுநர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேகமாக கீழே இறங்க தொடங்கினர். அப்போது பேருந்து முழுவதும் மளமளவென கொழுந்து விட்டு தீ பற்றி எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உடனடியாக கருமலை கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதில் பேருந்தும் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. மேலும் இந்த தீ விபத்தில் ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் என மொத்தம் 8 பேர் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தில் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது. இந்த விபத்து குறித்து கருமலை கூடல் காவல்துறையினர் வாக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.