‘பழைய பென்ஷன் தொகையை மீண்டும் அறிவிக்க வேண்டும்’

பழைய பென்ஷன் தொகையை மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைமை அலுவலகத்தில் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்…

பழைய பென்ஷன் தொகையை மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைமை அலுவலகத்தில் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு மற்றும் கு.தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அன்பரசு, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், விடியல் பிறக்கும் என முதலமைச்சர் சொன்னதாகக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சரை மக்கள் நம்பி இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், 5 ஆண்டுகளில், செய்யக் கூடிய சேவைகளை ஒரே ஆண்டில் செய்து விட்டேன் எனச் சொல்லும் அரசு, 80% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகக் கூறிவருவதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் திமுக அரசு வர வேண்டும் என மன நிறைவோடு வாக்களித்ததாகவும், அதனடிப்படையில் திமுக ஆட்சி அமைத்ததாகவும், ஆனால், தற்போது தங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாகத் தான் இந்த அரசு செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், இன்று வரை ஒன்றிய அரசு அறிவித்த 3% அகவிலைப்படி ஏற்படுத்தித் தரப்படவில்லை எனக் குற்றச்சாட்டு தெரிவித்த அவர், பழைய பென்ஷன் தொகையை மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அண்மைச் செய்தி: ‘‘கள்ளக்குறிச்சி வன்முறைச் சம்பவத்திற்கு மாணவியின் தாயாரே காரணம்’ – தனியார்ப் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார்’

தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த கோரிக்கை நிச்சயம் போய்ச் சேர வேண்டும் எனத் தெரிவித்த அவர், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாகக் கூறினார். மேலும், உரிமைகளை மீட்கும் விதமாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய வகையில் லட்சக்கணக்கான ஆசிரியர் அரசு ஊழியர்களைக் கொண்டு மாபெரும் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த நிழ்சிக்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.