சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை புதுப்பிக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள இடத்தில் பீனிக்ஸ் பறவை போன்று தோற்றமளிக்கும் பிரம்மாண்ட நினைவிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தின் திறப்பு விழா வரும் 27ந்தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இன்று சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று ஜெயலலிதா நினைவிடப் பணிகளையும், அதன் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டிருந்தனர்.







