கரூரில் 100க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகளை வீட்டிற்கு கொண்டு சென்ற செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி போடும் பணியும் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே கரூர் நகராட்சியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு தாய் சேய் நல விடுதியில் செவிலியராக பணியாற்றி வரும் தனலட்சுமி என்பவர் மருத்துவமனையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். மேலும் அந்த தடுப்பூசிகளை பிறருக்கு செலுத்தி பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேஸ்வரி தனலட்சுமியின் வீட்டில் சோதனை செய்ததோடு அங்கிருந்த தடுப்பூசிகளை பறிமுதல் செய்துள்ளார். மேலும் கரூர் நகராட்சி ஆணையருக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் தனலட்சுமியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தனலட்சுமி மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







