அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வீட்டின் குளியலறையில் அணு ஆயுதம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், பதவிக் காலம் முடிந்தும் முக்கிய ஆவணங்களை ஆவண காப்பகத்திடம் ஒப்படைக்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்த எஃப்.பி.ஐ அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்த விவகாரத்தில் அவர் மீது சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் மியாமி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அணு ஆயுதம், ராணுவம் உள்ளிட்டவை தொடர்பானவை எனவும், அவை ட்ரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வரும் 13-ம் தேதி மியாமி நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 100 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.







