ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை பஹானகா ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பஹானகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் விரைவு ரெயில், சரக்கு ரயில் ஹவுரா ரயில் ஆகியவை ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளாயின.
இதில், 288 பேர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்து 200 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பஹானகா ரயில் நிலைய அதிகாரி பச்சை சிக்னல் அளித்ததால் விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக கணினி முறையில் இயங்கும் இன்டர் லாக்கிங் அமைப்பை அணைத்து வைத்ததும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பஹானகா ரயில் நிலையத்தை சீலிட்டு பதிவுப் புத்தகத்தையும் சிபிஐ கைப்பற்றி உள்ளதால், மறு உத்தரவு வரும்வரை அந்த ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் நிற்காது என தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.







