கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வட மாநில இளைஞர்கள் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவலர்கள் கணேசபுரம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவரது பெயர் ரபீன்ந்தர பரிடா என்பதும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி தனியார் ஆலையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இவர் கடந்த சில மாதங்களாக தான் தங்கி இருக்கும் குடியிருப்புக்கு அருகே கஞ்சா விதைகளைத் தூவி கஞ்சா செடியை வளர்த்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு சோதனை செய்ததில் சுமார் மூன்று மாதமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த செடிகளைப் பறிமுதல் செய்த போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் வேலை இல்லாததால் கஞ்சா விற்பனை செய்தால் வருமானம் கிடைக்கும் என்பதால் கஞ்சா செடி பயிரிட்டதாகவும், அதனை விற்பனை செய்ய முயன்றபோது தான் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-ம.பவித்ரா