தமிழ்நாட்டில் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை எனவும் மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழ்நாடு அரசு மூடி வருவதாக தவறான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழ்நாடு அரசு 131 அம்மா மருந்தகங்கள், 174 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 305 மருந்தகங்களை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்கெனவே இயங்கி வந்த அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை எனவும் மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது என்றும் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126 – லிருந்து 131 – ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மருந்தகங்கள் அனைத்தும் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருவதால் ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர் என்பதனை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மருந்து மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் மேலும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பலன் பெறுவதற்கும் கூட்டுறவுத்துறை ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கூறியுள்ளார்.








