பொருளாதார ஆலோசனை குழுவின் தரவு சார்ந்த முன்னெடுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துபாய் பயணத்தை முடித்து கடந்த 28ஆம் தேதி சென்னை திரும்பினார். துபாய் பயணத்தால் முதலீடுகள் வரும் எனவும், இதனால் பொருளாதாரம் உயரும் எனவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் உள்ள எஸ்தர் டஃப்லோ நேற்று முதலமைச்சரை சந்தித்து பேசினார். இந்த ஆலோசனையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் முருகானந்தம், ஜெ-பால் தொண்டு நிறுவன குளோபல் செயல் இயக்குனர் இக்பால் தாலிவால், ஜெ-பால் தெற்கு ஆசிய தொண்டு நிறுவன செயல் இயக்குனர் ஷோபினி முகர்ஜி ஆகியோர் கால்ந்துக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு, குறிப்பாக தனியாக வாழும் மூத்த குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை எஸ்தர் டஃப்லோ அடிக்கோடிட்டுக் காட்டினார். ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் முதியோர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கண்டறிந்து, தகுந்த கொள்கைகளை கொண்டுவர, அடுத்த எட்டு ஆண்டுகளில் கணக்கெடுப்பும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
மூத்த குடிமக்களையும், மாற்றுத்திறனாளிகளையும் காக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டங்கள் மிகவும் உதவியாக இருப்பதாகவும், அதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். மக்களுக்கு தேவைப்படும் மருத்துவத்தை, வீட்டிற்கே சென்று வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தையும் டஃப்லோ பாராட்டினார்.
மேலும், பொருளாதார ஆலோசனை குழுவின் தரவு சார்ந்த முன்னெடுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் எனவும் எஸ்தர் டஃப்லோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.