சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ள ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், அடுத்த ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிவரும் ஏரிகளில் மொத்த கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில் 8,566 மில்லியன் கன அடி குடிநீர் இருப்பில் உள்ளது. இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. வீராணம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, புழல், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளின் மூலம் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனால், அடுத்த ஒரு வருடத்திற்கு சீரான குடிநீர் விநியோகம் தொடர்ந்து செய்யப்படும். சென்னை பெருநகர மக்களுக்கு தற்போது ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 1,030 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவு :
• வீராணம் – எரியின் முழு கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
• கண்ணன்கோட்டை,தேர்வாய்கண்டிகை – எரியின் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
• புழல் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் 2,894 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது.
• செம்பரம்பாக்கம் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,033 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது.
• பூண்டி மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 540 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது.
• சோழவரம் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 134 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது.
பூண்டி ஏரியில் 10 கோடி மதிப்பீட்டில் நீர்வளத் துறையின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுப்பணி துறையின் நீரியல் மற்றும் நிலையியல் மையத்திற்கு நீர் வழங்குவதற்கான இரண்டு கிணற்று மதகுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
சீரமைப்பு பணிகளால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திட்டத்தில் இருந்து வரும் நீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் மழை நீரை சேமிக்க புழல் எரியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் எந்த தடையும் இல்லை என்றும் குடிநீர்வாரியம் தெரிவித்துள்ளது.
-இரா.நம்பிராஜன்








