கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு என்பது கிடையவே கிடையாது என தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள சூரியா கல்வி குழுமத்தின் பொறியியல் கல்லூரியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அசோக் சிகாமணி, “இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழகத்திலுள்ள கிரிக்கெட் சங்கம் தான் சிறந்த பாரம்பரியமிக்க கிரிக்கெட் சங்கமாக செயல்படுகிறது. கிராமப்புறங்களில் அதிகமானோர் கிரிக்கெட்டில் திறமை மிக்கவர்களாக உள்ளனர். அவர்களை வெளிகொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் திறமை மட்டும் தான் வெளியில் தெரிகிறது. அவர்களை போல் சாய்கிஷோர், சாய் சுதர்சன், ஜெகதீசன் போன்றவர்கள் உள்ளனர். ஜெகதீசன் தொடர்ந்து ஐந்து சதங்கள் 277 ரன் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். இதன் மூலம் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்திய அணிக்கு தேர்வானது” என்றார்.
கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு என்பது கிடையவே கிடையாது என்றும் அரசியல்வாதிகள் பரிந்துரை செய்தால் கூட கிரிக்கெட்டில் வரமுடியாது என்றும் அப்படி ஒருவர் இருவர் அரசியல் பின்புலத்தில் வந்தால் கூட அவர்கள் திறமையால் மட்டுமே கிரிக்கெட்டில் நிலைத்து நிற்க முடியும் என்றும் குறிப்பிட்ட அசோக் சிகாமணி, “அரசியல் பின்புலம் இருந்தால் வரலாம் என்றால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மகன் இந்திய அணியில் தேர்வாகி இருக்கலாம் ஆனால் அது நடைபெறவில்லை இங்கு திறமை மட்டுமே கிரிக்கெட்டிற்கு முக்கியம்” எனக் கூறினார்.







