202 வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், அதில் பத்தை கூட நிறைவேற்றவில்லை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அக்.6, 9 என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், விழுப்புரத்தை அடுத்த கோலியனூரிலுள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. சில இடங்களில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் ஆள் தான் மாறியுள்ளனர்; ஆட்சி மாறவில்லை. எடப்பாடி சென்று, ஸ்டாலின் வந்துள்ளார் என கூறினார். தொடர்ந்து 202 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், பத்தை கூட அவர் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். ஏழுவர் விடுதலைக்கு சட்டம் நிறைவேற்றினால், அதை மத்திய அரசு ஏற்பதில்லை. இதை எதிர்த்து தமிழக ஆட்சியாளர்கள் குரல் எழுப்புவதில்லை என சீமான் குற்றஞ்சாட்டினார்.







