மாநில அரசை நன்றாக செயல்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே கருத்துகள் முன் வைக்கப்படுகின்றதே தவிர, மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலின் முன்பு கார் சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பார்வையிட்டார். தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்வில் பங்கேற்று கந்தசஷ்டி கவசம் பாடியதோடு பாஜக நிர்வாகிகள் மற்றும் கோவில் பூசாரியிடம் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாலை, ”கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்குள் மத நல்லிணக்கம், மத ஒற்றுமை இருக்க வேண்டும் என பிராத்தனை நடைபெற்றது. 8 நாட்களாக இந்த சம்பவம் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றோம். இதை கடந்து செல்ல வேண்டும். இது உயிரிழப்பு படை தாக்குதல். மேலும் காக்கும் கடவுள் காவல்துறை நண்பர்கள்தான். இதன் துணை தாக்குதல் நடக்காமல் காவல்துறை தடுத்துள்ளனர்.
மாநகர காவல்துறை துணிந்து உள்ளே சென்று தடுத்து உள்ளனர். மக்களை மதரீதியாக பிளவுபடுத்த முயற்சித்தாலும் , கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். மதத்தை வைத்து சூழ்ச்சியாடி ஒற்றுமை உணர்வை குலைக்க முயற்சிக்கின்றனர். இதில்
சம்பந்தபட்டவர்களை குற்றவாளிகள் எனத்தான் குறிப்பிட்டு வருகிறோம். பாஜக எந்த வித மதச்சாயத்தையும் பூசவில்லை.
சனதான தர்மத்தின் அடிப்படையே யாரையும் பிரித்து பார்க்க கூடாது என்பதுதான். எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் , வன்முறையை கையில் எடுக்க கூடாது. அவர்களுக்கு யாரும் ஊக்கம் கொடுக்க கூடாது. மத குருமார்கள் அவர்களை கண்டித்து நல்வழிபடுத்த வேண்டும். மாநில அரசை நன்றாக செயல்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை நோக்கி கருத்துகள், கேள்விகள் முன் வைக்கப்படுகின்றதே தவிர, மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. யாருக்கும் எதிராக கருத்துக்களை சொல்லவில்லை.
இதை செய்தவர்கள் நிச்சயமாக சாதாரணமாக செய்யவில்லை. உயிர்சேதம் ஏற்படுத்த வேண்டும் என்று செய்திருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணையில் சில தவறுகள் நடந்துள்ளது. டிஜிபி கொடுத்த அறிக்கைக்கு பதில் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 96 பேரை கண்காணிக்க ஜூன் 19 ம் தேதி அறிக்கை கொடுக்கப்பட்டது. இதில் 89 வது நபராக முபின் இருக்கிறார். காவல் துறைக்கு அறிக்கை கிடைத்தும் முறையாக கண்காணிக்கவில்லை.
காவல்துறைக்குள் சரியான தொடர்புகள் இல்லாததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது உயிரிழப்பு தாக்குதல். இதை சிலிண்டர் விபத்து என்று சொல்ல முடியாது. சிலிண்டர் விபத்து என்று சொன்னால் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு இல்லமால் போகும். ஐஎஸ்ஐஎஸ் என்பதை இஸ்லாம் மத குருமார்களே எதிர்கின்றனர். இஸ்லாமிய மத குருமார்களை நேரில் சந்திக்க இருக்கிறேன். ஒரு மனிதனை கண்காணிக்க சொல்லும் போது அதை சரியாக செய்யாமல் விட்டதால் ஏற்பட்ட சிஸ்டமிக் ஃபெய்லியர்தான் இது.
கோவை மாநகரில் கடந்த செப்டம்பர் மாதம் வரை உளவுத்துறை அதிகாரி இல்லை. மத்திய உளவுப்பிரிவு எந்த தகவல் கொடுத்தாலும் களத்தில் அதை செய்ய வேண்டியது காவல்துறையினர் தான். ஆகஸ்ட் மாதத்தில் lone wolf attack நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
NIA ஒரு விசாரணை ஏஜென்சி, அவர்கள் விசாரணை மட்டுமே நடத்துவார்கள். தவறு செய்து இருக்கின்றனர் என்பதற்காக இஸ்லாமியர்கள் மீது குற்றம் சொல்ல முடியாது. காவல்துறை தீவிரவாத தாக்குதல் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்த மாட்டேன் என்கிறார்கள். ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை சொல்ல வில்லை. காவல்துறையில் முடிவெடுக்க வேண்டிய சில அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை. தீவிரவாதத்தை பொறுத்த வரை யாரும் சமாதானபடக்கூடாது” என்றும் தெரிவித்தார்.