அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை மேற்கொண்ட சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் இன்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
பீகார் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்த ஷகில் அக்தர் 1989ம் ஆண்டு தர்மபுரியில் ஏ.எஸ்.பி.யாக தனது காவல் பணியை தொடங்கினார். தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டண்ட், சிவகங்கை எஸ்.பி., ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்பி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை ஷகில் அக்தர் வகித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஷகில் அக்தர் பூக்கடை துணைக்கமிஷனராக இருந்த போதுதான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ திரைப்படத்தின் திருட்டு விசிடிக்களை பறிமுதல் செய்ய பர்மாபஜாரில் அதிரடி ரெய்டு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் வடசென்னையை கலக்கிய ரவுடிகள் வெள்ளை ரவி, சேரா ஆகியோரை கைது செய்து அவர்களின் அட்டகாசத்தை அடக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருந்த போது ரேசன் அரிசியை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்திய குற்றவாளிகளை கண்டறிந்தார். 2002ஆம் ஆண்டு மதுரை துணை ஆணையராக இருந்தபோது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த அல் உம்மா தீவிரவாதியான இமாம் அலி உட்பட 5 பேரை பெங்களூரில் வைத்து என்கவுண்டர் செய்தவர்.
இது போன்ற மெச்சத்தகுந்த காவல் பணிகளால் பாராட்டப்பட்ட டிஜிபி ஷகில் அக்தர் 3 முறை ஜனாதிபதி பதக்கத்தைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 10ம் தேதி முதல் சிபிசிஐடி டிஜிபியாக பணியாற்றிய ஷகில் அக்தர், தலைமையில் தான் முக்கிய வழக்குகள் நடந்து வந்தன.
10 ஆண்டுகளாக கொலையாளிகள் சிக்காமல் இருக்கும் அமைச்சர் கே.என். ராமஜெயம் கொலை வழக்கு, கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்த கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு ஆகிய மிக முக்கிய வழக்குகள் டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் தான் விசாரிக்கப்பட்டது. தனது துணிச்சலான காவல் பணியால் தனக்கென தனி முத்திரை பதித்த டிஜிபி ஷகில் அக்தர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
-பரசுராமன்.ப