அதிமுக கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிறைவாக மரக்கடை பகுதி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அதிமுகவில் யார் வேண்டுமானாலும், கட்சி பதவிக்கும், முதலமைச்சர் பதவிக்கும் வர முடியும் என குறிப்பிட்டார். மு.க. அழகிரி அரசியலுக்கு வரக் கூடாது என மு.க. ஸ்டாலின் எண்ணுவதாகத் தெரிவித்த அவர், சொந்த அண்ணனுக்கே எதிராக செயல்படக் கூடியவர், நாட்டு மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்வார் என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, திருச்சி திருவெறும்பூரில் உள்ள BHEL தொழிற்சாலையின் சிறு குறு மற்றும் சார்பு நிலை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து, தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது, நிறைவேற்ற முடியாத கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி சாடினார்.







