வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளருக்கான வாய்ப்புள்ளவராக நிதிஷ் குமார் இருப்பார் என்று அவரது கட்சி அறிவித்துள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பிகாரில் மீண்டும் முதலமைச்சராகி இருக்கிறார் நிதிஷ் குமார்.
கடந்த 12ம் தேதி டெல்லி வந்த அவரிடம், வரும் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிதிஷ் குமார், அப்படி ஒரு எண்ணம் தமக்கு இல்லை என்றும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் அது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் ஒன்றிணைக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாகவும், நேர்மறை எண்ணத்தோடு தான் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறினார். தன்னால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வேன் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
நரேந்திர மோடி 2014ல் வெற்றி பெற்று பிரதமரானார்; ஆனால், 2024லும் அவர் வெற்றி பெறுவாரா என்றும் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் அல்ல என தெரிவித்தார். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த விரும்பினால் அந்த வாய்ப்பை அவர் ஏற்பார் என கூறினார்.
நிதிஷ் குமாரின் முக்கிய நோக்கமே, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான முயற்சிகளை நிதிஷ் குமார் எடுப்பார் என்றும் லாலன் சிங் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யலாம் அல்லது இணைந்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற பிறகு பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யலாம் என கூறிய லாலன் சிங், இரண்டு வாய்ப்புகளுமே பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றார்.









