காவல் நிலையத்திற்கு நித்யானந்தா தோற்றத்தில் வந்த சாமியாருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே தனது ஆசிரமத்தை
சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்க பல்லடம்
காவல் நிலையத்திற்கு சொகுசுக்கார்களில் சாமியார் ஒருவர் வந்தார். விலை உயர்ந்த காரில், கழுத்தில் உத்ராட்சம், தலைப்பாகை மற்றும் கையில் வேலுடன் வந்திருந்த அவரை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயினர். பார்ப்பதற்கு நித்யானந்தா போன்று தோற்றத்துடன் இருந்தவர் பெயர் பாஸ்கரானந்தா.
கோவை செல்வபுரத்தை சேர்ந்த பாஸ்கரானந்தா காரணம்பேட்டை அருகே செல்வகுமார்
என்பவரது இடத்தை, 5 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து அங்கு ஆசிரமம் அமைக்கும் பணி மேற்கொண்டார். இதனிடையே செல்வகுமார் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாதால் அந்த இடம் ஏலம் விடப்பட்டது. ராஜகோபால் என்பவர் அந்த இடத்தை ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரம கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனையடுத்து பல்லடம் காவல்நிலையத்தில் சுவாமி பாஸ்கரானந்தா புகார் மனு அளித்தார். அதன்பேரில் இரு தரப்பையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இரண்டாம் கட்ட விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெறும் என தெரிவித்தனர்.
காவல் நிலையத்திற்கு இரண்டாம் நாள் வந்திருந்த பாஸ்கரானந்தா முழுமையாக நித்யானந்தா போலவே சிரித்த முகத்துடன் காணப்பட்டார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கி அதிகாரிகள் தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் ஆசிரம, கட்டடத்தை சேதப்படுத்திவிட்டதாகவும், தன்னை போலி சாமியார் போல் சித்தரித்து கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட ஆசிரமத்தை இடித்துவிட்டதாகவும், தன்னை நித்யானந்தா போல் சித்தரித்து இடத்தை காலி செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சட்டப்படி எந்த நடவடிக்கையையும் சந்திப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். நித்யானந்தா போல் இருந்த பாஸ்கரானந்தாவுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.








