இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 9 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர்களை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை (இன்று) நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மீனவர்கள் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து 9 மீனவர்களையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







