பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை NIA முதலில் விசாரிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “கோவையின் வளர்ச்சிக்கு, மக்களின் பாதுகாப்புக்கு முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநிலம் கடந்த விசாரணை வேண்டும் என்பதால் என்ஐஏவுக்கு வழக்கை முதலமைச்சர் மாற்றியுள்ளார். ஆனால், அரசியல் காரணங்களுக்காக சிலர் தேவையில்லாமல் பதட்டத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரையில் ராணுவ வீரர் உடலை வாங்க என்ன அரசியல் செய்தார்களோ, அதுபோன்று கோவையிலும் செய்ய பார்க்கிறார்கள் என்று விமர்சித்த செந்தில் பாலாஜி, “காவல்துறை விசாரணை செய்து கொண்டிருக்கும்போது அண்ணாமலை சில தகவல்களை முன்கூட்டியே சொல்கிறார் என்றால் முதலில் என்ஐஏ விசாரணை செய்ய வேண்டியது அவரைத்தான். பாஜக பந்த் அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன தேவை இருக்கிறது. இதற்காக பந்த் அறிவித்தவர்கள் ஏன் நூல் விலையேற்றம் மற்றும் ஜிஎஸ்டியால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் போது பந்த் அறிவிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “பந்த் என்கிற பெயரில் கடைகளை அடைக்கச் சொன்னாலோ, மக்களை வற்புறுத்தினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.கோவையில் அமைதியான சூழல் நிலவுகிறது.பாதுகாப்பு பணியில் 3000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து ஒரு கட்சியும், அந்த கட்சியின் தலைவரும் அரசியல் செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது” என்றும் கூறினார்.