சென்னை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனையில் 57 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்தாண்டு கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்களை கடலோர பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, மேலும் இருவர் கைதாகினர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை உட்பட பல மாவட்டங்களில் நடத்திய சோதனையில், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சபேசன் என்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் மண்ணடி, சேலையூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் உட்பட 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.








