2024ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடக்கி வைத்தார்.
இதில் சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிந்தனையாளர்கள் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. நாளை நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்கிறார்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் தீவிரவாத நடவடிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளது. பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு 64 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 90 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 2019ம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் ரூ.57 ஆயிரம் கோடி முதலீடு பெற்றுள்ளது. சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தல், எல்லை தாண்டிய பயங்கரவாதம், தேசத்துரோகம் போன்ற குற்றங்களை கையாள்வதற்கு திட்டமிட இந்த சிந்தன் ஷிவிர் உதவும் என்றார்.
தேசிய புலனாய்வு அமைப்பை திறம்பட மேலும் அவர்களின் அங்கிகாரத்தை திறம்பட செயல்படுத்த அனைத்து மாநிலங்களிலும் 2024-க்குள் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளோம். எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட கையாள்வது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும் என்று கூறினார்.







