தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.9.5 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை கடந்த 24ம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்தனர். இதனால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 20-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.9.5 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் மூலம் 2.80 லட்சம் பயணிகள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து சேவைகளில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 173 கோடி பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்துள்ளார்கள் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.








