ஓசூரில் நியூஸ் 7 தமிழ் நடத்தும் பிரம்மாண்ட ஊரும் உணவும் நிகழ்ச்சி இன்று
தொடங்குகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ் 7 தமிழ் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதி மதுரையில் முதன் முதலாக ஊரும் உணவும் திருவிழா நடைபெற்றது. மக்களின் பேராதரவோடு மதுரையில் நடைபெற்ற ஊரும் உணவும் திருவிழாவின் வெற்றியின் தொடர்ச்சியாக இந்த மாபெரும் உணவு திருவிழா ஓசூரில் இன்று தொடங்கவுள்ளது.
ஓசூர் முனீஸ்வரர் சர்கிள் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, பாரம்பரிய பறை இசையுடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் இடம் பெறுகின்றன. விதவிதமான ஃபலூடா, மெர்சிலிஸ் ஐஸ் கிரீம், மணப்பாறை முறுக்கு, மூலிகை தேநீர், காரமடை முறுக்கு, ஆற்காடு மக்கன்பேடா, மதுரை மீன் பஜ்ஜி, முட்டை மிட்டாய் உள்ளிட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழாவுக்கு வரும் வாடிக்கையாளர்களில் மணிக்கு ஒருமுறை குலுக்கல்
முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்த உணவு திருவிழாவிற்கு வருபவர்களின் கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையிலும், பாரம்பரிய கலைகளை போற்றும் வகையிலும் மல்லர் கம்பம் சிறப்பு நிகழ்ச்சியும், நாட்டுபுற கலைஞர்களின் மயிலாட்டம், ஒயில் ஆட்டம், சிலம்பாட்டம் குழந்தைகள் விளையாடுவதற்கு போட்டிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகிறது.







