நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பிரத்தியேக உணவுகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா, மதுரை தமுக்கம் மைதானத்தில், நேற்று தொடங்கியது. இன்றுடன் நிறைவடையும் இந்த திருவிழாவில் கட்டணம் எதுவுமில்லாமல் இலவசமாக பங்கேற்கலாம். பங்கேற்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்பவர்களுக்கு மணிக்கொரு முறை பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உணவுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் சவால்களும் களைக்கட்டுகின்றன. திறமைகளை வெளிப்படுத்துபவர்களுக்குப் பரிசும் வழங்கப்படுகிறது. நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவடைகிறது. ஊரும் உணவும் திருவிழா நேற்று தொடங்கியதும் மதுரை மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். எதிர்பாராத வகையில் பொதுமக்கள் வருகை தந்து உணவுவகைகளை உண்டு மகிழ்ந்தனர்.
உணவுத் திருவிழாவில், தூத்துக்குடி மக்ரூன், கிருஷ்ணகிரி நைஸ் பால்கோவா, காரமடை தேர் மிட்டாய், சீர்காழி பருத்தி பால் அல்வா, தூத்துக்குடி கருப்பட்டி இனிப்புகள், காரைக்கால் அல்வா மற்றும் ஜாமூன், தஞ்சாவூர் அசோகா அல்வா, திண்டிவணம் முட்டை மிட்டாய், சேலம் மற்றும் கரூர் தட்டு வடக்கடை, அலங்காநல்லூர் பால் பன், திருச்சி அக்கார வடிசல், சேலம் மூலிகை தந்தூரி டீ, ஊத்துக்குளி வெண்ணெய், ஹனி பீடா, அம்பாசமுத்திரம் அரிசி அப்பளம், ஊட்டி வறுக்கி, மார்த்தாண்டம் தேன், உடுமலை பருப்பு சாதம், ஹோகேனக்கல் மீன் சாப்பாடு, ஆம்பூர் பிரியாணி, பள்ளிபாளையம் சிக்கன், கருப்பு கவுனி ஐஸ்கிரீம், மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் சந்திரகலா, 25 வகை சர்பத், நெல்லை இடியாப்பம் சொதி, திருப்பத்தூர் மக்கன்பேடா, திண்டுக்கல் வாழை இலை பரோட்டா, கீழக்கரை துதல் தொல் அல்வா, ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ், திண்டுக்கல் சீரகசம்பா பிரியாணி, மதுரை முயல் கறி, பள்ளிபாளையம் சிக்கன், நாமக்கல் முட்டை, ஊத்துக்குளி வெண்ணெய், பன்ருட்டி முந்திரி, பாண்டிச்சேரி கமரக்கட்டு, சேலம் ஜவ்வரிசி இனிப்புகள், நாகை பனங்கிழங்கு கேக், கரூர் கரம்ஸ், மாஞ்சோலை டீ உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று கலந்து கொண்டவர்கள் உணவுகளை உண்டு மகிழ்ந்ததோடு, குலுக்கல் முறையில் பரிசுகளையும் அள்ளி சென்றனர். வெட் கிரைண்டர், வெள்ளி நாணயங்கள், கிப்ட் ஹாம்பர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்களும் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். உணவுத் திருவிழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக இளவட்டக்கல் தூக்குதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நியூஸ் 7 தமிழின் உணவு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். அதனை தொடர்ந்து 2-வது மற்றும் நிறைவு நாளான இன்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நண்பகல் 12 மணிக்கு தொடங்கியதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டனர். தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகள் ஒரே இடத்தில் சங்கமித்ததால், பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
மேலும் ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுவதால் பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இன்று இரவு 10 மணியுடன் ஊரும் உணவும் திருவிழா நிறைவு பெறுவதால் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்