நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நா அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்றார்.
தொடர்ந்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு ஒருமுறை கதை சொல்லியிருந்தார். ஆனால், நடிப்பில் ஈடுபாடில்லை என்றும் இயக்குநராக விரும்புவதாகவும் கூறிய சஞ்சய், சில குறும்படங்களையும் இயக்கினார். சமீபத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருந்தது.
அதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்கள் லைகா நிறுவனத்தின் எக்ஸ் தளத்தில் வெளியானது. இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சஞ்சய் அறிமுக இயக்குநர் என்பதால் பிரபல இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தால் தான் படத்தின் மார்க்கெட் உயரும் என தயாரிப்பு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.







