மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான தடை நீக்கம்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற…

மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வரும் 15ம் தேதி வெளியிட உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடந்த 2022ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும், அப்போது தன்னிடம் எந்த நிதி ஆதாரமும் இல்லை என தெரிவித்த விஷால், அன்றைய தினம் மினி ஸ்டூடியோ நிறுவன உரிமையாளர் வினோத் குமாரிடம் இருந்து 1 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளதாகவும் லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இதன்படி நடிகர் விஷால் இன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது விஷால் தரப்பில், நீதிமன்ற உத்தரவை அவர் மீறவில்லை என்றும், இந்த பிரச்னைக்கு மத்தியஸ்தர் ஒருவரை நியமித்து தீர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிகர் விஷால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடந்த 13-ந்தேதி வரையிலான தனது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்புக்கும், நடிகர் விஷாலுக்கும் தொடர்பு இல்லை என்பதால், அந்த படத்தை வெளியிட அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அடுத்த விசாரணையின் போது நடிகர் விஷால் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.