தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலை ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி
குடியிருப்பு பகுதியில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று பரவியதால் அவர்கள்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்தும்,
சிகிச்சை அளிப்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்பொழுது அவர்களிடம் பரிசோதனையில் நெகடிவ் வரும் வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 7 லிருந்து 8 மாநிலங்களில் 1000லிருந்து 5000 வரை பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகிறது.
நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பு இந்தியாவில் 17 ஆயிரத்தை கடந்திருக்கிறது. அதே போல் தமிழகத்திலும் நேற்று ஒரே நாளில் 1359 நபர்களுக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் தினமும் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் நேற்று 266 பேரும் மொத்தமாக 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
மேலும் செங்கல்ப்பட்டு நாவலூர் பகுதியில் உள்ள குடியிருப்பில் தொற்று பாதிப்புள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இங்கு ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள காரணத்தினால் குடியிருப்பு பராமரிப்பு பணியில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்கள் அனைவருக்குமே ஆர்டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த குடியிருப்பு வளாகத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்காக தடுப்பூசி முகாம்
அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று 1359 பேருக்கு நேற்று பாதிப்பு ஏற்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பாதித்தவர்கள் என்கின்ற வகையில் 5912 பேர் உள்ளனர். 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எட்டு சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
மேலும், தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் மக்கள் முககவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் தடுப்பூசி போடப் கூடிய வகையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டாமல் அரசு மருத்துவமனை நிர்வாகிகளை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். விடுபட்டு உள்ளவர்களை விவரங்களை சேகரித்து முகாம்களின் மூலம் வருகின்ற பத்தாம் தேதி தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 12 வயதை கடந்த அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி ஒன்றியஅரசு மற்றும் மாநில அரசு சார்பில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை 60 வயதைக் கடந்தவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் இலவசமாக போடப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.








