திருமணம், இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு நாளில் 1 லட்சத்து, 62 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒமிக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் 5,797 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தலைநகர் திருவணந்தபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமணம், இறுதிச் சடங்கு போன்றவற்றில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், அரங்க நிகழ்வாக இருந்தால் அதிகபட்சம் 75 பேர் வரையும், திறந்தவெளி நிகழ்வாக இருந்தால் அதிகபட்சம் 150 பேர் வரை பங்கேற்கலாம் என இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை, இந்த வார இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலோசனைக் கூட்டங்களை முடிந்தவரை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.