வங்கக்கடலில் நாளை மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 9ம் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிக கனமழையும் கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதன் காரணமாக வடகிழக்கு பருவழை தீவிரமடையும் எனவும், தமிழகத்தில் வரும் 20ம் தேதிக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நவம்பர் 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.







