சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளை ஆய்வு செய்து திட்ட மதிப்பீடுகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு உயர் அலுவலர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை யில் தொடர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி மற்றும் சென்னை மண்டலங்களில் உள்ள நீர்த்தேக்க பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி மண்டலத்தில் காவேரி – குண்டாறு இணைப்புத் திட்டம் , கட்டளைக் கால்வாய் , இராஜவாய்க்கால் , நஞ்சை புகலூர் , ஆதனூர் குமாரமங்கலம் மற்றும் முக்கொம்பு மேலணை ஆகிய இடங்களில் கட்டப்படும் கதவணை, கல்லணைக் கால்வாய் , காவேரிக் கால்வாய் ஆகியவற்றில் நடைபெறும் புனரமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை மண்டலத்தில் திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் – தத்தமஞ்சு ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி நீர்தேக்கம் அமைக்கும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் , விழுப்புரம் மாவட்டம் கழுவேலி ஏரியை மீட்டெடுக்கும் திட்டம் , செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரியை மீட்டெடுக்கும் திட்டம் , வெள்ளத் தணிப்புத் திட்டம் , துாண்டில் வளைவுகள் மற்றும் கடலோர தடுப்புச் சுவர்கள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது .
அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பு அணைகளை அமைக்க வேண்டும் என தெரிவித்தார். புதிய நீர்நிலைகளை உருவாக்குதல் மற்றும் சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளைச் ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடுகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு உயர் அலுவலர்களுக்கு துரைமுருகன் அறிவுறுத்தினார்.







