போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஐஐடியுடன் இணைந்து புதிய செயலியை உருவாக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருப்பதாகச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சாலை விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சி சாலை பாதுகாப்பு குழுமம் சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2000 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சாலை விதிகள் கண்காணிக்கும் பணியில் சென்னையில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்த உள்ளதாகவும் அதற்காக ஒரு லட்சம் அட்டைகள் தற்போது வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்த திட்டம் வெற்றி பெற்றால் மேலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த சிறப்பு அட்டை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் மாணவர்கள் சாலையில் செல்லும் போது வாகனங்கள் ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்கப்படுகின்றார்களா என்பதைக் கண்காணித்து, மீறப்படும் போது என்ன தவறுகளை வாகன ஓட்டிகள் செய்கிறார்கள் என்பதைப் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள அட்டையில் குறிப்பிட மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், மாணவர்கள் குற்றங்களைக் குறிப்பிடும் இந்த அட்டையை ஆய்வு செய்து, அந்த தறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னையில் சாலைப்போக்குவரத்து அதிகரிப்பதற்குக் காரணம் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாகன பெருக்கம் எனக் கூறினார். சாலைகள் இன்னும் அதே அளவில் இருப்பதால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், முடிந்த அளவு போக்குவரத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஐஐடியுடன் இணைந்து புதிய செயலியை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கி இருப்பதாகக் கூறினார். எந்த பகுதியில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதிகளின் தகவல்கள் கூகுள் மேப் மூலம் கண்காணித்து, தரவுகளை ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
சென்னையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு வழிச் சாலையாக மாற்றப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்த திட்டம் நல்ல பலனை வழங்கி இருப்பதாகவும், பலன் தராத பகுதிகளில் அந்த திட்டம் மீண்டும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பருவமழை காலங்களில் மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் கையாள மாநகராட்சி, வருவாய்த்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையுடன் இணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த வருடம் பருவ மழைக் காலத்தைச் சிறப்பாகக் கையாள முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.