எனது படத்தைப் புறக்கணிக்காதீர்கள் என்று நடிகர் அமீர்கான் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினிமா உலகம் நமக்கு அளித்த ஆக சிறந்த படங்களில் ஒன்று பாரஸ்ட் கம்ப். உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994ம் ஆண்டு வெளியான இந்த படம் இன்றளவும் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட 13 பிரிவுகளில் தேர்வாகி 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படம் இது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்தகைய புகழ் பெற்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லால் சிங் சத்தா உருவாகியுள்ளது. அமீர் கான், கரீனா கபூர் நடிக்கும் இந்த படமானது ஆகஸ்ட் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மிக சிறந்த படங்களை மறுஉருவாக்கம் செய்வது கடினம். அந்த சவாலை இந்த படம் ஈடு செய்ய முடியுமா? என்ற கேள்வி விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கும், நடிகர் அமீர்கானுக்கும் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தை புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு நடிகர் அமீர்கான் 2015ம் ஆண்டு அளித்த பேட்டி காரணமாக சொல்லப்படுகிறது. 2015ம் ஆண்டு அமீர் கான் அளித்திருந்த பேட்டியில், அவரது மனைவி இந்நாட்டில் சகிப்புத் தன்மையின்மை அதிகரித்து வருவதால் வேறு நாட்டிற்கு செல்லலாமா என்று வருத்தத்துடன் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பேட்டியை மேற்கோள் காட்டி லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து, பாய்காட் பாலிவுட், பாய்காட் அமீர் கான், பாய்காட் லால் சிங் சத்தா போன்ற ஹேஷ்டேக்குகள் தமக்கு மிகவும் கவலையை அளிக்கிறது என்றும், இதற்கு காரணம், ஏராளமானோரின் இதயங்கள் தமக்கு இந்தியா பிடிக்காது என்று நம்பிக் கொண்டிருக்கிறது என அமீர்கான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது உண்மையில்லை என்றும், தாம் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன் என்றும் அமீர் கான் பதிவிட்டுள்ளார். மேலும், தமது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-ம.பவித்ரா