மாணவர் முகுந்த் பிரதீஷ் 300க்கு 300 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய
தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனைபடைத்துள்ளார்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேரவும், மேலும் பல தனியார் பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேரவும் ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என 2 பிரிவுகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது.
ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐஐடி கல்லூரிகளில் சேரலாம்.
இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு
செய்திருந்தனர். முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24, 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1, ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதற்காக பதிவு செய்த 12,21,615 பேரில் 11,70,036 பேர் தேர்வெழுதினர். இந்த நிலையில் முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 23 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுளனர். தேசிய முகமை தேர்வு நிறுவனம் நடத்திய ஜேஇஇ முதன்மை தேர்வில் பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் 300-க்கு 300 மதிப்பெண் எடுத்துள்ளார்.
முதலிடம் பெற்ற 23 மாணவர்களில் இவர் ஒருவரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இவரது தந்தை ஸ்ரீகாந்த் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில்
பொறியாளராகவும், அம்மா தபால் துறையில் உதவியாளராக இருந்து விருப்ப பணி ஓய்வு
பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாணவர் முகுந்த் பிரதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
வெற்றிக்கு காரணமான எனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தாய் தந்தைக்கு நன்றி செலுத்துவதாகவும், நான் இந்த தேர்வில் வெற்றி பெற்றதற்கு தமிழக கல்வித் துறை அமைச்சர் தொலை பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் என்றும் முகுந்த் பிரதீஷ் தெரிவித்தார். செமி கண்டக்டர் துறையில் பொறியாளராக வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றும் மாணவர் முகுந்த் பிரதீஷ் தெரிவித்தார்.









